Saturday, April 3, 2010

என் (நம்) நண்பனுக்காக எழுதி முடிக்கப்பட வேண்டிய கடிதம்,... - 2 -


நேரம் எனது கடிகாரத்திலும், சென்னை சென்ட்ரல் கடிகாரத்திலும் சரியாக 09:30 என்று காட்டும் வேளையில் எனக்குள் ஒரு அதிர்வு. உடனே எனது நினைவு சுதாரித்து எனது அலைபேசி அடிக்கிறது என்று எனக்கு ஞாபகம் செய்தது. எடுத்து அலைபேசிக்கு  உயிர் கொடுத்த விநாடி மறுமுனையில் பிரசாந்த் பேசினான். 
"மச்சி, இப்பதான் வீட்டுல இருந்து கிளம்புறேன், இன்னும் ஒரு 20 நிமிசத்துல சென்ட்ரலுக்கு வந்துடுவேன்" என்று சொல்லி இணைப்பை துண்டித்தான். எனக்கு தெரியும் கண்டிப்பாக அண்ணாநகரில் இருந்து சென்ட்ரலுக்கு அதுவும் இந்த காலை போக்குவரத்தில் குறைந்தது அவன் வந்து சேர 40 நிமிடங்களாவது பிடித்துவிடும்.  சரி இன்னும் அரை மணி நேரம் என்ன செய்வது என்று நடந்து செல்கையில் சரவணபவன் முன் என் விழி படர்ந்தது. சரி, ஈரோடிருக்கு செல்ல எப்படியும் மாலை 5 மணி ஆகிவிடும் என்பதால் சிறிது சாப்பிடுவோம் என்று மாடி படிக்கட்டுகள் ஏறி உள்ளே நுழைந்தேன். பையா(Bayaa) ஏக் plate இட்லி என்று என் நுனி நாக்கு கூறும் வேளையில் தான் உணர்ந்தேன் நான் இருப்பது ஹைதராபாதில் அல்ல சென்னையில், உடனே சுதாரித்து "அண்ணே ஒரு plate இட்லி " என்று சொன்னேன். சரியாக 5 நிமிடங்களில் என் கண் முன் அழகான இட்லியுடன் மூவர்ண சட்னிகளும் வந்து என்னை  சாப்பிடு என தூண்டியது. 3 மாதங்கள் கழித்து தமிழ் இட்லி சாப்பிடுவதில் என்ன ஒரு சுகம். 
முடித்து விட்டு சென்ட்ரல் ஹாலில் காத்திருக்கும் போது என் தோள் மீது ஒரு கை விழுந்தது, திரும்பி பார்க்கையில் எனக்குள் மகிழ்ச்சி. சரியாக 2 வருடங்கள் கழித்து பிரசாந்தை பார்கிறேன். கொஞ்சம் வெள்ளையாக தெரிந்தான். ஆனால் இன்னும் அதே 50 - 55 கிலோவை தாண்டி வராமல் அவன் உடல் அடம் பிடித்து கொண்டு இருக்கிறது என்று எனக்கு தெரிந்தது. இருந்தாலும் அந்த ஒரு IT நிறுவனத்தில் வேலை பார்க்கும் professionalism அவனிடம் அழகாக தெரிந்தது. 

" டேய் எரும, எப்படி டா இருக்க?" என்று பேச்சை ஆரம்பித்தேன்.
"ஹ்ம்ம், நல்லா இருக்கேன் டா, இப்பதான் உனக்கு கண்ணு தெரிஞ்சுதா என்ன பார்க்கணும்னு ?"
"டேய் நீயே இப்பதான் மும்பையில இருந்து சென்னைக்கு போன வாரம் வந்த, பின்ன எப்படி உன்ன பார்ப்பது?"
"சரி, திடிருன்னு என்ன ஊருக்கு? அப்பா, அம்மா, தங்கச்சி எல்லாம் எப்படி இருக்காங்க?"
"எல்லாரும் நல்ல இருக்காங்க. சரி ஊருக்கு பொய் 4 மாசம் ஆச்சு, அதான், அதுவும் இல்லாம ஹைதராபாத் வெயில் தாங்க முடியுள, அதான் ஒரு வாரம் ஈரோடுக்கு போலாம்னு,"..
இப்படியே ஒரு 20 நிமிடங்கள்  அனைத்து விசாரிப்புகளும்  பேசி கொண்டே முதல் பிளாட்பாரம் வந்து சேர்ந்தோம். இன்னும் வெஸ்ட் கோஸ்ட் எடுக்க 1 மணி நேரம் இருந்தது. அவனிடம் பேசிய 20 நிமிடங்களில் நான் தான் ஒவ்வொரு முறையும் பேச்சை ஆரம்பித்தேன். அவனிடம் எப்போதும் நான் பார்க்கும் அந்த உற்சாகமும், சிரிப்பும்  மிகவும் குறைந்து இருந்தது. வழக்கமாக நிறைய பேசுவான். ஆனால் இப்போது அந்த வழக்கம் அவன் பழக்கத்தில் இல்லை போலும். மிகவும் அமைதியாகவே இருந்தான். என்னதான் பிரச்னை என்று கேட்கலாம் என்று கேட்டேன் ,
"என்னடா, கம்பனிக்கு ரொம்பே வேலை பார்ப்ப போலிருக்கு ரொம்பவும் டல்லா இருக்க"
"அப்படி எல்லாம் ஒன்னும்  இல்லடா, நல்லாத்தான் இருக்கேன்"
" சரி, இப்பதான் சென்னைக்கு வந்துட்டே, இப்பவாது அடிக்கடி பெங்களூர் போறியா?"
"பெங்களூர் ஆ? எதுக்கு ?"
(இந்த பதிலை நான் எதிர்பார்கவில்லை, எதோ பிரச்னை அவனுக்குள் கபடி ஆடி கொண்டு இருக்கிறது என்று நன்றாக தெரிந்தது.)
" என்னடா இப்படி கேக்குற? , திவ்யா எப்படி இருக்கா? "
(அவனிடம் இருந்து வந்த பதில் மௌனம்)
" என்னடா ஏதாவது பிரச்சனையா உங்களுக்குள?"
(இதற்கும் அவனது பதில் மௌனம்)
" டேய், உன்கிட்டதான் கேள்வி கேக்குறேன், ஏதாவது சொல்லுடா? , ஏதாவது சண்டையா உங்களுக்குள?, ஏதாவது சொல்லுடா?"
(மௌனம், மௌனம் , மௌனம் இதையே நான் அவனிடம் திவ்யாவை பற்றி கேட்ட அனைத்து கேள்விக்கும் அவன் அளித்த பதில் )
"என்னடா, இவன் கிட்ட போய் எதுக்கு சொல்லிட்டு இருக்குனும்னு நினைகிரியா?"
"டேய், உளறாத உன்னை போய் எப்படி நான் அப்படி நினைப்பேன்"
(ஒரு வழியாக, இந்த கேள்விக்கு வாய் திறந்தான்)
"அப்ப, என்ன பிரச்சனைன்னு சொல்லு டா?"
"ஒன்னும் இல்ல, சும்மா சண்டை எங்களுக்குள்ள"
"பொய், பெரிய பொய் , வேற எதோ பெரிய பிரச்னை, என்னனு சொல்ல போறியா இல்லையா, ஏன்டா இப்படி இருக்க, சொல்லுடா" என்று நான் பொது இடத்தில் இருப்பதை கூட அறியமால் கோபமாக கத்தினேன். 
"இப்ப என்ன உனக்கு தெரியனும், திவ்யாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சு" 
(எனக்குள் அதிர்ச்சி, மிக பெரிய அதிர்ச்சி ,காரணம் இவர்கள் இருவரும் மற்ற காதலர்கள் போல் அல்ல, இவர்கள் காதல் எனக்கு ரொம்ப பிடிக்கும், அவ்வளவு அழகானது. அவர்கள் காதல் அவர்கள் இருவரையும் அவர்கள் வாழ்கையில் எவ்வளவு ஒரு நல்ல நிலைக்கு கொண்டு சென்றது என எனது நினைவில் இருந்த அனைத்து கடந்த கால சம்பவங்களையும் நினைக்க வைத்தது.) 
"என்னடா சொலுர, எனக்கு எதுவும் புரியல"
(அவன் குரலும், கைகளும் நடுங்கியது)
" டேய் பிரசாந்த், இவ்வளவு பெரிய பிரச்னை நடந்து இருக்கு, என்கிட்டே போன்'ல பேசும் போது ஒன்னும் சொல்லுல, ஏன்டா ? "
" டேய் என்னனு உன்கிட்டே சொல்ல சொலுர?"
" திவ்யா எப்படி டா இதுக்கு சமதிச்சா ?, நீ ஏன்டா போய் தடுக்குலே, அவங்க அப்பா, அம்மா தான் உனக்கு நல்ல பழக்கம் ஆச்சே, அவங்களுக்கு உன்ன நாள் தெரியும், அதுவும் இல்லாம அவங்க family 'ல நீயும் ஒருத்தர் போல தாண்டா இருந்த, பின்ன எப்படி? அவங்க அப்பா, அம்மா கிட்ட பேசி இருக்கலாம் தானே "
"ங்கோத்****...."

(அங்கிருந்த ரயில் அதிர்வை விட, இவன் கூறிய இந்த வார்த்தை என்னை அதிர வைத்தது. அதுவும் பிரசாந்த் வாயில் இருந்து வந்ததால். . காரணம் சிறு வயதில் இருந்தே ஒரு சின்ன கெட்ட வார்த்தை கூட பேசாதவன் அவன். அவனிடம் இருந்து இந்த வார்த்தை. நான் சற்றும் எதிர்பார்கவில்லை.   என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை, அவனை அணைத்து ஆறுதல் சொல்வது தவிர, என் தோளில் அவனது கண்ணீர் துளிகள்)
இன்னும் 5 நிமிடங்களில் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் தடம் 1 'ல் இருந்து புறப்பட தயாராக உள்ளது என்று என் காதில் அந்த செய்தி விழுந்தது.எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்த சத்தமான இடத்திலும் பிரசாந்தின் மௌனம் எனக்கு தெளிவாக கேட்டது. பிரசாந்தை இப்படியே விட்டு  கிளம்ப என்னால் முடியவில்லை இருந்தாலும் இந்த ரயில்'ஐ விட்டால் நான் ஈரோடுக்கு செல்ல இரவுதான் ரயில் இருக்கிறது. ஒரே குழப்பம். இருந்தாலும் எனக்கு வேறு வழி தெரியவில்லை. கிளம்பினேன் . . . பிரசாந்துடன் அவனது வண்டியில் கிளம்பினேன் . . . இன்று முழுவதும் அவனுடன் என் நேரத்தை செலவிட முடிவு செய்தேன்.

நேராக சென்ட்ரல் வெளியே வந்து அவனது பல்சர் 150 'யின் பின் இருக்கையை நான் ஆக்ரமித்து இருந்தேன். நேராக அண்ணாநகர் சென்றோம். அவனது வீட்டிற்கு. சுமார் 10 நிமிடங்கள் பைக் பயணத்தில் நாங்கள் இருவரும் பேசின வார்த்தைகள் "மௌனம்" . அவன் அவனது வண்டியில் DiscBrake அழுத்தி நிறுத்திய போது அவனது வீடு அழைத்தது. உள்ளே சென்று பிரசாந்தின் அப்பா, அம்மாவை சந்தித்து பேசினேன். இன்னும் அவர்களது பாசம் அப்படியே இருந்தது. ஒரு மணி நேரம் எங்களது நலம் விசாரிப்புகள், கடத்த கால நினைவுகளை பற்றி பேசினோம். பின்பு நானும் பிரசாந்தும் மதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டு நேராக கிளம்பிய இடம் பெசன்ட்நகர் பீச். சுமார்  3 மணி அளவில் பீச் மணலில் கால் வைத்தோம். பேசினோம், பேசினோம் நேரம் போவது தெரியாமல் பேசினோம். ஆனால் இந்த முறை அனைத்து விசயங்களையும் அவன்தான் பேசினான். மௌனமாக கேட்டு கொண்டே இருந்தேன். நடந்த அனைத்து விசயங்களையும் சொன்னான். பேசி முடித்து எனது கடிகாரத்தில் நேரம் பார்த்த போது மணி 7 . அந்த மாலை நேர சூரிய அஸ்தமனத்தையும், அழகையும் இப்போது என்னால் ரசிக்க முடியவில்லை. என் மனதிற்குள் நிறையே கோபம். பிரசாந்தை நினைத்து நிறைய வருத்தம். இவ்வாறு இப்போது என் மனதில் பிரசாந்தும் , அவனது திவ்யா மட்டும் தான் எனக்கு தெரிந்தார்கள். பிரசாந்தை விட இப்போது எனக்கு திவ்யாவை பற்றிய கவலைதான் அதிகமாக இருந்தது. 

இப்படியும் உலகத்தில் இந்த நவீன யுகத்தில் மக்கள் இருப்பார்களோ? என்று எனது கோபம் திவ்யாவின் வீட்டார் மீது திரும்பி இருந்தது. பிரசாந்திடம் பேச வார்த்தைகள் தீர்ந்து இருந்தது. அவன் மீது எனக்கு இப்போது இன்னும் அதிகமாக மரியாதை வந்து இருந்தது. அவனுக்கு நான் இப்போது என்ன செய்ய போகிறேன் என்று எனக்கு புரியவில்லை. யோசித்த கொண்டே இருக்கையில் தான் இரவு yercaud எக்ஸ்பிரஸ் ஞாபகம் வந்தது. பிரசாந்தை கூட்டி கொண்டு மறுபடியும் சென்னை சென்ட்ரல் சென்றேன் ஊருக்கு கிளம்ப. இப்போது என் மனதிற்குள் ஆயிரம் எண்ண ஓட்டங்கள். அனைத்தையும் மனதிற்குள் வைத்து கொண்டே பெசன்ட்நகர் பீச்சை விட்டு கிளம்பினோம்.
ரயில் நிலையத்தில் இறங்கிய பின்புதான் அந்த ஒரு எண்ணம் எனக்கு தோன்றியது. பிரசாந்திடம் கேட்கலாம் என்று எனக்கு பட்டது. அவனிடம் எனது Blog பற்றியும், அதில் கிடைக்கும் ரீச் பற்றியும் அவனிடம் கூறினேன். அவன் அந்த துக்கத்திலும் எனக்காக சந்தோஷபட்டான். அவனிடம், உன்னை பற்றியும், திவ்யா பற்றியும் எனது பர்சனல் ப்ளாகில் எழுத ஆசை படுவதாக கூறினான். அவனக்கு அதிர்ச்சி. நான் அவனிடம் அதற்கான காரணத்தை தெளிவு படுத்தினேன்.
"பிரசாந்த், நீ சொன்னது போல் திவ்யா பிரச்னை பற்றிய விஷயம் உனது கல்லூரி நண்பர்களுக்கு தெரியாது என்றாய். அவர்கள் அனைவரும் இப்போது திவ்யாவை பற்றி தவறாக நினைத்து கொண்டு இருப்பார்கள். அதை கண்டிப்பாக மாற்ற வேண்டும். அது மட்டும் இல்லாமல் உலகத்தில் இன்னும் இது போன்ற சம்பவங்கள் ஒரு பெண்ணுக்கு நடக்க கூடாது என்ற விசயமும் மக்களுக்கு தெரிய வேண்டும். அதற்காகத்தான் இந்த விசயத்தை பற்றி, உங்கள் அழகான காதல் பற்றி எழுத ஆசை படுகிறேன்." என்று கூறினேன்.
சிறிது நேரம் யோசித்து விட்டு சரி என்றான். அவனது சரி, ரயில் ஓட்டுனருக்கும் கேட்டிருக்கும் போல, yercaud எக்ஸ்பிரஸ் நகர ஆரம்பித்து விட்டது. பிரசாந்திடம், தைரியமாக இருக்க சொல்லி விட்டு கிளம்பினேன். நேராக எனது upper பெர்த்தில் ஏறி படுத்தேன். தூக்கம் வரவில்லை, வர போவதும் இல்லை என எனக்கு நன்றாக தெரிந்தது. எப்படி PRASANTH/DIVYA பற்றி blog 'இல் எழுதுவது என்று யோசித்து கொண்டே படுத்திருந்தேன். சட்டேன்று அந்த யோசனை தோன்றியது. பிரசாந்த் இதுவரை திவ்யாவின் அப்பா, அம்மாவிடம் கேட்க  நினைத்த விசயங்களை பிரசாந்தின் பார்வையில் கடிதமாக எழுதுலாம் என தோன்றியது. இதோ அடுத்த பதிவில் இருந்து கடிதம் ஆரம்பிக்க போகிறது. வைரவேலு அவர்களுக்கும், யமுனாதேவி அவர்களுக்கும் பிரசாந்த் எழுத போகிற கடிதம்.
(தொடரும்...)  




Related Posts with Thumbnails